சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: 7 பேர் விடுதலைக்கு தமிழக கவர்னர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதை அவர் ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. கவர்னர் அவ்வாறு தெரிவித்திருந்தால் எழுத்துபூர்வமாக நிராகரித்து அனுப்பும்படி தமிழக அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் மூலம் ஆளும் அதிமுக அரசும் கவர்னரும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக நாடகம் ஆடுவதாகவே நாம் எண்ணத் தோன்றுகிறது.
தமிழக ஆளுநர் தம்மிடம் கூறியது உண்மையா இல்லையா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது அவரது கடமையாகும். இல்லாவிட்டால் 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது கவர்னர் மட்டுமல்ல அதிமுக அரசும்தான் என்பதாகவே பொருள்படும்.